Published : 17 Nov 2021 05:49 PM
Last Updated : 17 Nov 2021 05:49 PM

கிரிப்டோகரன்சியை கட்டுப்படுத்த புதிய சட்டம்?- நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி

கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுடிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இப்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அரசு இன்னும் இயற்றவில்லை. அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலீட்டாளர்களை மனதில் வைத்து, இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியும் கவலை தெரிவித்துள்ளன.

நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

அதன்படி, பரிவர்த்தனைகளுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்யக்கூடும். அதேசமயம் அவற்றை தங்கம், பங்குகள் அல்லது பத்திரங்கள் போன்ற சொத்துக்களாக வைத்திருக்க அனுமதிக்கும் என்று தெரிகிறது.

புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் கிரிப்ட்டோ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கும் எனத் தெரிகிறது.

பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி கிரிப்டோ நிறுவனங்களை கட்டுப்பாட்டு அமைப்பாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x