Last Updated : 15 Nov, 2021 06:19 PM

 

Published : 15 Nov 2021 06:19 PM
Last Updated : 15 Nov 2021 06:19 PM

சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்கள் பதவிக் காலம்: அவசரச் சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்ல வேண்டும்: மணிஷ் திவாரி வலியுறுத்தல்

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்கள் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டித்ததை எதிர்த்து அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக் காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் திருத்தச் சட்டம் (2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருக்கும் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் 17-ம் தேதியோடு முடிகிறது. 17-ம் தேதிக்குப் பின் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. இந்த அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவி நீட்டிப்பு வழங்குமா என அடுத்த இரு நாட்களில் தெரியவரும்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கும் இரு சட்டவிரோதமான அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

இந்த அவசரச் சட்டம் சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்களுக்கு விடுக்கும் செய்தியாகும். அதாவது, நாங்கள் உங்களை நியமித்திருக்கிறோம். எங்கள் உத்தரவுப்படி பணியாற்றினால், எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்தினால், உங்களின் பதவிக் காலம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்படும். ஆதலால், அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும்.

கடந்த 1990களில் ஜெயின் ஹவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால், இது சட்டவிரோதமானது. அந்தத் தீர்ப்பின்படி, சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்கள் பதவிக் காலம் 2 ஆண்டுகள்தான். இரு அமைப்புகளையும் எந்தத் தவறான செயல்கள் செய்யவும் அரசு தூண்டக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மனுதாரர் வினித் நாராயண் வழக்கில் கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில், சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்கள் பதவிக் காலத்தை நீட்டிக்க முயன்ற அரசின் செயலை நீதிமன்றம் கண்டித்து அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x