Published : 15 Nov 2021 12:23 PM
Last Updated : 15 Nov 2021 12:23 PM

எதிர்ப்புக் குரல்களை அடக்கவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்களுக்கு 5 ஆண்டு பதவிக்கால அவசரச் சட்டம்: காங்கிரஸ் காட்டம்

எதிர்ப்புக் குரல்களை அடக்கவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக் காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் திருத்தச் சட்டம் (2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருக்கும் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் 17-ம் தேதியோடு முடிகிறது. 17-ம் தேதிக்குப் பின் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. இந்த அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவி நீட்டிப்பு வழங்குமா என அடுத்த இரு நாட்களில் தெரியவரும்

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மோடி அரசு தனது விஸ்வாசிகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றைச் சட்டவிரோதமாக அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கவிழ்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவும், சிபிஐ அமைப்பும் ரெய்டு நடத்துவதை விதியாக வைத்துள்ளன.

இந்த இரு விஸ்வாசிகளுக்கும் அதிகாரம் அளித்து, 5 ஆண்டுகள் பதவிக் காலம் அளித்துள்ளது மத்திய அரசு. இந்தச் செயல் எதிர்ப்பவர்களின் குரலை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மோடி அரசில் அமலாக்கப் பிரிவு, சிபிஐ அமைப்பு என்பது என்னவென்றால், ஈடி (ED)- எலெக்சன் டிபார்ட்மென்ட், சிபிஐ (CBI) என்பது காம்ப்ரமைஸ்டு பியூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்பதாகும். இயல்பாகவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது நேரடியாகவே 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மணிஷ் திவாரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஜெயின் ஹவாலா தீர்ப்புக்கு விரோதமாகவே இரு அவசரச் சட்டங்களையும் மோடி அரசு கொண்டுவந்துள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்கள் பதவிக் காலம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏன் பதவிக் காலம் 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. தேசத்தில் தகுதியான அதிகாரிகளே இல்லையா, நாட்டை விட்டுச் சென்றுவிட்டார்களா. பாஜக, என்டிஏ அரசில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அலுவலகங்களின் இயக்குநர்கள் முன் பதவி நீட்டிப்பு எனும் கவர்ச்சியைத் தொங்கவிடுவதன் மூலம், இரு அமைப்புகளிலும் எஞ்சியிருக்கும் ஒருமைப்பாட்டைத் தகர்க்கும் முயற்சியாகும்.

நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் பணியைச் சீர்குலைக்க மீண்டும் மீண்டும் அவசரச் சட்டத்தின் உதவியை மத்திய அரசு நாடுகிறது. வரும் 29-ம் தேதி நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் அதற்குள் இந்த அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டிய அவசரம் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில் கூறுகையில், “இரு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்தவே 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மூலம் வராமல் அவசரச் சட்டத்தின் மூலம் வருவதே மோடி அரசு கடைப்பிடிக்கும் வழி” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x