Last Updated : 12 Nov, 2021 05:51 PM

 

Published : 12 Nov 2021 05:51 PM
Last Updated : 12 Nov 2021 05:51 PM

மேட்டூர் அனல்மின் நிலைய சாம்பல்களால் மாசுபாடு: மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி. செந்தில்குமார் மனு

புதுடெல்லி

மேட்டூர் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்திலிருந்து எடுத்து செல்லப்படும் சாம்பல்கள் மூலம் ஏற்படும் தொடர் மாசுபாடுகளால் பலர் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுசூழல் நலன் கருதி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டாக்டர். டிஎன்வி செந்தில்குமார், மத்திய ரயில்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவிடம் மனு அளித்தார்.

மக்களவையின் எம்.பியான டாக்டர்.செந்தில்குமார் தனது மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இருந்து சாம்பலை லாரிகள் மூலம் ஏற்றியும் இறக்கியும் வருகின்றனர்,

பின்பு சேமித்த சாம்பலை அங்கிருந்து வேன்கள் வழியாக சிமென்ட் நிறுவனங்களுக்கு மாற்றப்படுகிறது. இந்த செயல்முறைகள் அனைத்தும் காற்று மற்றும் தண்ணீருடன் கலப்பதால் மாசுபாடு தெளிவாகத் தெரிகிறது.

இப்பகுதியில் 5000 குடும்பங்கள் மற்றும் 20,000 மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஈரமான சாம்பலுக்குப் பதிலாக உலர் சாம்பலைக் கொண்டு செல்வதால் மாசு தொடர்பான பிரச்சினை ஏற்படுகிறது.

இதன் நச்சு காரணமாக புற்றுநோய், ஆஸ்துமா, சைனஸ் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் மிகுதியாக இங்கு வாழும் மக்களிடம் காணலாம். அதுவல்லாது மழைக் காலங்களில் சாம்பலானது மழைநீருடன் கலந்து மேட்டூர் அணையில் சேருகிறது.

தற்போது MTPS இல் நிலக்கரி இறக்கும் பகுதி வரை ரயில் பாதை உள்ளது, இது துரதிர்ஷ்டவசமாக சேமிப்பு பகுதி வரை இல்லை.

இந்த ரயில் பாதையை நீட்டிப்பதன் மூலம் மாசுபாடு சிக்கலை தீர்க்க முடியும். எனவே நிலக்கரி இறக்கும் பகுதியிலிருந்து 2 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இதுவே MTPS இன் சேமிப்புப் பகுதி பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும். பொதுமக்களுக்கு ஏற்படும் மாசுபாட்டையும் தீர்க்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x