Published : 11 Nov 2021 10:42 AM
Last Updated : 11 Nov 2021 10:42 AM

வரலாற்றில் முதல்முறை: இந்திய சாமானியருக்கு புனிதர் பட்டம்: போப் ஆண்டவர் வழங்குகிறார்

கோப்புப்படம்

திருவனந்தபுரம்

இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மதம் மாதிரிய 18-வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் சாமானியர் ஒருவருக்கு முதல்முறையாக புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்க உள்ளார்.

இதற்கு முன் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள், பிஷப் போன்றவர்களுக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த சாதாரண மனிதருக்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்க உள்ளார்.

தேவசகாயம் பிள்ளை உள்ளிட்ட உலகளவில் 6 பேருக்கு 2022ம் ஆண்டு மே 15ம் தேதி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நடக்கும் நிழ்ச்சியில் போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்க உள்ளார். இதற்கான முறையான அறிவிப்பை வாடிகனில் உள்ள திருச்சபை கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி திருவிதாங்கூர் ராஜாவின் எல்லைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நட்டாளம் கிராமத்தில் இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர் தேவசகாயம் பிள்ளை. அதன்பின் கிறிஸ்துவ மதத்தின் மீதான ஈர்ப்பால் 1745ம் ஆண்டு கிறிஸ்தவராக மதம் மாறி, தனது பெயரை லாசரஸ் என்று மாற்றிக்கொண்டார் தேவசகாயம் பிள்ளை.

தேவசகாயம் பிள்ளை

தேவசகாயம் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியபின் சாதிப் பாகுபாடு குறித்தும் விமர்சித்து, அனைவரும் சமம் என்று பேசி வந்தார் . தேவசகாயத்தின் பேச்சு உயர்சாதியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியதால், கடந்த 1749ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் பல்வேறு துன்பங்களைச் சந்தித்த தேவசகாயம், 1752ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்று வாடிகன் செய்திக் குறிப்பு கூறுகிறது.

தேவசகாயத்தின் வாழ்க்கை தொடர்பான காட்சிகள், இடங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் டயோசிஸ்க்கு உட்பட்ட இடத்தில் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குப்பின் தேவசகாயம் ஆசிர்வதிக்கப்பட்டவராக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டார். அதன்பின் அடுத்து ஆண்டு புனிதராக போப் ஆண்டவரால் உயர்த்தப்படுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x