Last Updated : 10 Nov, 2021 08:29 AM

 

Published : 10 Nov 2021 08:29 AM
Last Updated : 10 Nov 2021 08:29 AM

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கர்நாடக கிராமியக் கலைஞருக்கு பத்ம ஸ்ரீ விருது: தன்னுடைய ஸ்டைலில் ஆசி வழங்கினார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வாழ்த்திய மூன்றாம்பாலினத்தவர் மஞ்சம்மா ஜோகதி | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


கர்நாடகாவைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் மஞ்சம்மா ஜோகதிக்கு பத்ம ஸ்ரீ விருது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கி கவுரவித்தார்

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. 2020ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டிற்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.

இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் மஞ்சம்மா ஜோகதியின் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில்அவருக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவி்ந்த் வழங்கினார்.

மஞ்சம்மா ஜோகதியை விருது பெற அழைக்ககப்பட்டபோது, எழுந்து சென்ற அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அதன்பின் குடியரசுத் தலைவர் அருகே சென்றதும் மஞ்சம்மா ஜோகதி அவருக்கே உரிய தனித்தன்மையுடன் ஆசிர்வதித்து, வாழ்த்துக்களைக் கூறினார். மஞ்சம்மா வாழ்த்தியதைப் பார்த்த ராம்நாத் கோவிந்த்தும் மகிழ்ச்சி அடைந்தார்.

அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து மகிழ்ச்சியுடனும்,முகத்தில் புன்னகையுடனும் விருதைப் பெற்றார்.

கர்நாடக மாநிலத்தின் நாட்டுப்புற கலைகளுக்கு தலைமையிடமான ஜனபடா அகாடெமயின் தலைவராக மஞ்சம்மா ஜோகதி இருந்து வருகிறார். 60வயதான மஞ்சம்மாவின் இயற்பெயர் மஞ்சுநாத் ஷெட்டி. தன்னுடைய பதின்பருவத்தில் தான் ஒரு பெண் என்பதை உணர்ந்த மஞ்சுநாத் ஷெட்டி அதை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, மஞ்சுநாத் ஷெட்டியை அவரின் குடும்பத்தார், ஹொசபேட்டை அருகே இருக்கும் ஹூலிஹே அம்மா கோயிலுக்கு அழைத்துச் சென்று மூன்றாம் பாலினத்தவராக அறிவித்து, கடவுள் ரேணுகா எல்லம்மாவுக்கு சேவை செய்ய அர்ப்பணித்தனர். மூன்றாம்பாலினத்தைச் சேர்ந்தவர்கள், எல்லம்மாவை திருமணம் செய்வதாக நம்பப்படுகிறது.

அதன்பின் மஞ்சும்மா இளமைக் காலத்தில் வறுமை,சமூகப் புறக்கணிப்பு, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல் என பலக் கொடுமைகளை எதிர்கொண்டு முன்னேறி நாட்டுப்புறக் கலைகளைக் கற்றார்.

கிராமியக் கலைகளில் சிறப்பாகத் தேறிய மஞ்சம்மாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு கர்நாடக ஜனபதா அகாடெமி விருது வழங்கியது, தனக்கு விருது வழங்கிய அகாடெமிக்கே அடுத்த 13 ஆண்டுகளில் மஞ்சம்மா தலைவராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு மஞ்சம்மாவுக்கு கன்னட ராஜ்யோத்ஷவா விருது வழங்கி கர்நாடக அரசு கவுரவித்தது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x