Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

லடாக் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது லே மாவட்டம். கடல் மட்டத்திலிருந்து 3,524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த லே நகரமானது ஆண்டு முழுவதும் கடும் குளிரைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பை வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி லே மாவட்டத்திலுள்ள 60 கிராமங்களில் தற்போது 12 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பை வழங்கி ஜல் ஜீவன் திட்டம் வெற்றி கண்டுள்ளது. இந்தப் பகுதியில் ஜீரோ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது. இந்த கடும் குளிரிலும் வீடுகளுக்கு வெற்றிகரமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதை ஜல் ஜீவன் திட்டம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், லே மாவட்டத்திலுள்ள உம்லா கிராமத்தில் ஒரு பாட்டியும், அவரது பேத்தியும் மிகுந்த மகிழ்ச்சியில் குடிநீரை குழாயிலிருந்து பிடிக்கும் புகைப்படத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருவதால் இது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து ஜல் ஜீவன் திட்டத்தின் கூடுதல் செயலரும், இயக்குநருமான பரத் லால் கூறும்போது, “மக்களின் வாழ்க் கையை மாற்றி வருகிறது ஜல் ஜீவன் திட்டம். தற்போது ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பை வழங்குவதே எங்களது திட்டம். லே மாவட்டத்தில் 12 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பைக் கொடுத்து வெற்றி கண்டுள்ளோம். ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குடிநீரைப் பிடிக்கும் அந்தபாட்டி, பேத்தியின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதுதான் உண்மையான திருப்தி.

இந்த உம்லா கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. குக்கிராமமான இந்த உம்லாவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்தத் திட்டத்தில் வெற்றி கண்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x