Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

திருப்பதியில் நடைபெற உள்ள  தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருப்பதியில் வரும் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் இம்மாதம் 14-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சி குறித்து முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில முதல்வர்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்கின்றனர்.

இதில் தென்னிந்தியாவின் வளர்ச்சி, பிரச்சினைகள் குறித்து அலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள தாஜ் ஓட்டல் ஏற்கெனவே போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஓட்டல் மட்டுமின்றி, இப்பகுதி முழுவதும் போலீஸார் ஜல்லடையிட்டு கண்காணித்து வருகின்றனர். திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு தலைமையில் காவல்துறை அதிகாரிகள் தாஜ் ஓட்டல் மற்றும் முதல்வர்கள், ஆளுநர்கள் வரும் ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருமலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் இதில் பங்கேற்ற விஐபிக்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், திருமலையில் அவர்களுக்கு தங்கும் அறைகள், சுவாமி தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தென்மண்டல மாநாட்டை யொட்டி தமிழகம்-ஆந்திரா, ஆந்திரா-கர்நாடகா எல்லைகளில் கூடுதலாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பலநாயுடு நேற்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x