Published : 08 Nov 2021 08:26 PM
Last Updated : 08 Nov 2021 08:26 PM

முகேஷ் அம்பானி வீடு குறித்து விசாரித்த மர்ம நபர்கள்: மும்பையில் போலீஸார் உஷார்

மும்பை

மும்பையில் முகேஷ் அம்பானி வீடு குறித்த தகவல்களை கேட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரிலையன்ஸ் குழும தலைவரான பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி வீடு அமைந்து உள்ளது. அன்டிலா என பெயரிப்பட்டுள்ள இந்த வீடு பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடமாகும்.

முகேஷ் அம்பானியின் வீட்டருகே சில மாதங்களுக்கு முன்னர், வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

இந்தநிலையில் இன்று மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட கால் டாக்சி டிரைவர் ஒருவர், பை வைத்திருந்த இரண்டு நபர்கள் முகேஷ் அம்பானியின் இல்லத்தை குறித்த தகவல்களை விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆசாத் மைதானம் அருகேயுள்ள கில்லா நீதிமன்றத்தின் வாயிலில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட மாருதி வேகன் - ஆர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தபடி இருவர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாக அவர் தகவல் அளித்துள்ளார்.

அவர்கள் சீட்டின் கீழ் பை ஒன்று இருந்தது என்றும் இருவரும் குர்தா, பைஜாமா அணிந்திருந்ததாகவும், இந்தி மற்றும் உருதுவில் பேசியதாகவும் கால்டாக்சி டிரைவர் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து மும்பை நகர காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.கால்டாக்சி டிரைவர் குறிப்பிட்ட வேகன் ஆர் காரின் வாகன பதிவு எண் கொண்ட காரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முகேஷ் அம்பானியின் வீட்டில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x