Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM
கடற்படைக்காக நவீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ரகசிய ஆவணங்களை கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு தனியார்நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தாக கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், கடற்படையில் பணிபுரியும் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சோதனை நடத்தினர். இதில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ரன்தீப் சிங் என்பவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதன் அடிப்படையில், அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கடற்படை கமாண்டர் அஜித் குமார் பாண்டே, ஓய்வுபெற்ற கடற்படை கமாண்டர் எஸ்.ஜே. சிங், தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த 6 பேர் மீது டெல்லி ரோஸ் அவென்யுவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT