

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் பனிச்சரிவில் சிக்கினர்.
இதில் டார்ஜிலிங்கை சேர்ந்த பவன் தமாங் என்ற வீரர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுனில் ராய் என்ற மற்றொரு வீரரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சுனில் ராய் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு பெற்றோரும் 2 தம்பிகளும் உள்ளனர்.
லான்ஸ் ஹவில்தாராக பணியாற்றிய பவன் தமாங்குக்கு மனைவி, 6 வயது மகள் மற்றும் பெற்றோர் உள்ளனர்.
சியாச்சின் பனிமலைக்கு செல்லும் வழிகளில் ஒன்றான துர்துக் என்ற இடத்தில் நேற்று முன்தினம் பனிச்சரிவு ஏற்பட்டது. இதே பகுதியில் கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 வீரர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.