

டெங்கு காய்ச்சலுக்கான அடிப்படைக் காரணம் அறியப்படாததால் நோயாளிகள் இறக்க நேரிடுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரித்துள்ளார்.
டெல்லியில் டெங்கு நிலவரம் குறித்து ஆராயவும், கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவும் டெல்லி யூனியன் பிரதேச அரசுடன் உயர்நிலைக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
ஏழை மக்கள் அதிக பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர், காய்ச்சல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், உடல் வெப்பநிலையைக் குறைக்கும் மருந்துகளை அளிக்கின்றனர். காய்ச்சலுக்கான அடிப்படைக் காரணம் அறியப்படாததால் நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. அதனால் டெங்குவை அடையாளம் காண பரிசோதனை மிகவும் முக்கியம் . அதிகாரிகள் டெங்குவுக்கான பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் . சில மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். சில மருத்துவமனைகள் காலியாக உள்ளன. இதனால் அனைத்துத் தரப்பினரிடையே வலுவான தகவல் தொடர்பு அவசியம். கொரானா படுக்கை வசதிகளை டெங்கு சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.