

புதுடெல்லி: ‘மத்திய அரசின் தலைவராக மோடியின் 20 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இதில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பிரதமர் மோடி ஒரு உண்மையான தலைவர். 24 காரட் சொக்கத் தங்கம் போன்றவர். அர்ப்பணிப்பிலும், ஒருங்கிணைப்பிலும் அவருக்கு நிகர் யாரும் இல்லை. குஜராத் முதல்வராகவும் இந்தியாவின் பிரதமராகவும் 20 ஆண்டுகளாக அரசின் தலைவராக மோடி இருக்கிறார். அவர் மீது ஒரு ஊழல் கறை கூட கிடையாது.
அவரது அரசியல் பயணத்தைப் பார்த்தால் அவர் எத்தனையோ சவால்களை சந்தித்து வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த சவால்களையெல்லாம் அவர் திறமையாக சமாளித்துள்ளார். அவற்றை நிர்வாகவியல் பள்ளிகளில் முன்மாதிரி பாடமாக வைக்க வேண்டும். நல்ல ஆளுமைக்கும், நல்லாட்சிக்கும் உதாரணமாக பிரதமர் மோடி திகழ்கிறார்.
குஜராத் முதல்வராக இருந்தபோது மாநிலத்தை வெகுவாக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார். குஜராத்தில் மதச்சார்பின்மையின் புதிய அத்தியாயத்தை மோடி தொடங்கினார். பிரதமர் மோடியின் முடிவெடுக்கும் திறனும் அவரது நிர்வாகத் திறமையும் அவரிடத்தில் என்னைக் கவர்ந்தவை. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.