Last Updated : 29 Oct, 2021 12:03 PM

 

Published : 29 Oct 2021 12:03 PM
Last Updated : 29 Oct 2021 12:03 PM

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் தற்கொலைகள் அதிகரிப்பு; தமிழகம் 2-வது இடம்: விபத்து உயிரிழப்பு 11% குறைந்தது: என்சிஆர்பி தகவல்

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் தற்கொலைகள் மூலம் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. தற்கொலைகளில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

அதேநேரம், விபத்துகளின் மூலம் நடக்கும் உயிரிழப்பு கடந்த 2020-ம் ஆண்டில் 11 சதவீதம் குறைந்துள்ளதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது.

நாட்டில் விபத்துகள், தற்கொலைகள் மூலம் 2020-ம் ஆண்டில் நடந்த உயிரிழப்புகள் குறித்து என்சிஆர்பி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தற்கொலைகள் குறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2016-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 8 பேர் தற்கொலை செய்தனர். 2017-ம் ஆண்டில் 1.29 லட்சம் பேரும், 2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் பேரும் தற்கொலை செய்தனர். 2019-ம் ஆண்டில் 1.39 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 52 தற்கொலைகள் நடந்துள்ளன.

தற்கொலைகள் வீதம் 2016-ம் ஆண்டில் 10.3 சதவீதம் இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து 11.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு தற்கொலைகள் சதவீதம் 11.3 சதவீதமாக இருக்கும்போது, நகரங்களில் தற்கொலை வீதம் 14.8% ஆக இருக்கிறது.

கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதில் அதிகமானோர் மாணவர்கள், சிறு தொழில்முனைவோர்கள், கல்வியறிவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிகரிப்பு

கடந்த ஆண்டில் அதிகமாக தற்கொலைகள் நடந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த தற்கொலைகளில் 13 சதவீதம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளன. இந்த மாநிலத்தில் கடந்த 2019-ல் 13.6 சதவீதமும், 2018-ல் 13.4 சதவீதமும் தற்கொலை வீதம் இருந்தநிலையில் 2020-ம் ஆண்டு சற்று குறைந்துள்ளது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை தற்கொலைகள் சதவீதம் 2018-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் தேசிய அளவில் நிகழ்ந்த தற்கொலையில் 11 சதவீதம் தமிழகத்தில் நடந்துள்ளன. 2-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 2018-ல் 10.3 சதவீதமாக இருந்த தற்கொலைகள், 2019-ம் ஆண்டில் 9.7 சதவீதமாகக் குறைந்து பின்னர் கடந்த ஆண்டு 11% அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த தற்கொலையில் 3-வது இடத்தில் மத்தியப் பிரதேசம் (9.5%), மேற்கு வங்கம் (8.6%), கர்நாடகா (8%) ஆகியவை உள்ளன.

தமிழகத்தில் தற்கொலைகள் கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டில் 22 சதவீதம் அதிகரித்துள்ளன. புதுச்சேரியில் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

தற்கொலைக்கான காரணங்கள்

தற்கொலைக்கான காரணங்களில் பிரதானமாகக் கூறப்படுவது குடும்பப் பிரச்சினைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்தான். இதில் குடும்பப் பிரச்சினைகளால் 33.6% தற்கொலைகளும், உடல்நலக் குறைவால் 18% தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.

போதை மருந்து பயன்படுத்துவதால் 6% தற்கொலைகளும், திருமணம் தொடர்பாக 5%, காதல் விவகாரங்களில் 4.4% தற்கொலைகள் நடந்துள்ளன. கடன் பிரச்சினை காரணமாக 3.4% தற்கொலைகளும், வேலையின்மை காரணமாக 3.4 % தற்கொலைகளும் நடந்துள்ளன. தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த தற்கொலையில் 1.4% பேர் தேர்வில் தோல்வி் அடைவதால் தற்கொலை செய்துள்ளனர்.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்

கடந்த ஆண்டு தற்கொலை செய்தவர்களில் 12.6% பேர் கல்வியறிவு அற்றவர்கள். 15.% பேர் குறைந்தபட்சமாக தொடக்கக் கல்வி பெற்றவர்கள். 19.5 % பேர் ஓரளவுக்கு நடுத்தரமாக கல்வி கற்றவர்கள், 23.4% பேர் மெட்ரிக் அளவில் படித்தவர்கள், 4% அதிகமானோர் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

ஒட்டுமொத்தமாக 35,771 பேர் படித்தவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 17.7 சதவீதமும், 2-வது இடத்தில் தமிழகத்தில் 11.2 சதவீதமும், கேரளாவில் 8.8 சதவீதமும் நடந்துள்ளன.

தமிழகத்தில் எப்படி?

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக, 4,423 பேர் தற்கொலை செய்துள்ளனர், தேசிய அளவில் 26.2 சதவீதமாகும். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக, 7,523 பேர் தற்கொலை செய்துள்ளனர். தேசிய அளவில் இது 44.6 சதவீதமாகும்.

கூட்டமாகத் தற்கொலை செய்தல், குடும்பமாகத் தற்கொலை செய்தலில் தேசிய அளவில் தமிழகத்தில் அதிகபட்சமாக 22 சம்பவங்கள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 19, மத்தியப் பிரதேசத்தி்ல 18, ராஜஸ்தானில் 15 சம்பவங்கள் நடந்துள்ளன.

வயதின் அடிப்படை

2020-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த தற்கொலைகளில் 18 வயதுக்குக் கீழ் உள்ள ஆண்களில் 5,392 பேரும், பெண்களில் 6,004 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்தப் பிரிவில் மட்டுமே பெண்கள் தற்கொலை அதிகரித்துள்ளது. மற்ற பிரிவான 18 வயது முதல் 30 வயதுவரை, 30 முதல் 45 வயது, 45 வயது முதல் 60 வயது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண்கள்தான் அதிகமாகத் தற்கொலை செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தத் தற்கொலையில் அதிகபட்சமாக தினக்கூலிக்குச் செல்வோர் தற்கொலை செய்துகொள்வது 24.6 சதவீதமாக இருக்கிறது. வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது 14.6% ஆக இருக்கிறது. சுயதொழில் செய்வோர், கடன் பிரச்சினை, தொழிலில் நஷ்டம் போன்ற காரணங்களால் 11.3% பேரும், வேலையின்மையால் 10.2% பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

மாணவர்கள் தற்கொலை

இந்தியாவில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்வது கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 12,526 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,648 மாணவர்களும், ஒடிசாவில் 1,469 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,158 பேரும், தமிழகத்தில் 930 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்''.

இவ்வாறு என்சிஆர்பி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x