Published : 28 Oct 2021 05:19 PM
Last Updated : 28 Oct 2021 05:19 PM

3 வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜாரானார். கடந்த 3 நாட்களாக அவர் ஆஜராகி தனது வாதத்தை வைத்தார்.

அப்போது அவர் ‘‘ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது. அது மிகப் பழைய உரையாடல், அதற்கும் அக்டோபர் 2 ஆம் தேதி கார்டீலியா கப்பலில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை. ஆர்யன் கான் அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட் வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர்.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி

ஆர்யன் கானிடம் இருந்து பெரிய அளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டதாகக் கூறி ரிமாண்ட் விண்ணப்பம் தவறாக வழிநடத்துகிறது. ரிமாண்ட் விண்ணப்பத்தில் சரியான உண்மைகள் குறிப்பிடப்படவில்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்.’’ எனக் கூறினார். மேலும் இன்று ஆஜரான முகுல் ரோஹத்கி தனது வாதங்கள் தொடர்பான ஆவணங்களையும் சமர்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோஹத்கி கூறியதாவது:

3 நாட்கள் வாதங்களுக்கு பிறகு ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் உள்ளிட்டோர் நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வெளியான பிறகு சிறையிலிருந்து வருவார்கள்.

விரிவான உத்தரவு நாளை வழங்கப்படும். சனிக்கிழமைக்குள் அனைவரும் சிறையிலிருந்து வெளியே வருவார்கள் என்று நம்புகிறோம்.

எனக்கு இது வழக்கமான வழக்கு தான். சில வழக்குகளில் வெல்வது, சிலவற்றை இழப்பது வழக்கம் தான். ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x