Published : 28 Oct 2021 03:51 PM
Last Updated : 28 Oct 2021 03:51 PM

‘‘30 லட்சம் மக்களுக்கு பேரழிவு ஏற்படும்’’- முல்லைப் பெரியாறு அணையில்  142 அடி நீர் தேக்க கேரளா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருக்கும் என்ற கண்காணிப்புக் குழுவின் கருத்துக்கு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 126 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நிலநடுக்க வாய்ப்புள்ள மண்டலத்தில் உள்ளது எனவும், கேரள மாநிலம் முழுவதும் 30 லட்சம் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பேரழிவு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கேரள அரசு கூறியுள்ளது.

தேனி மாவட்டத்திற்கு அருகில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதார மாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணை பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக பல லட்சம் ரூபாய்களை தமிழக அரசு செலவழித்து வருகிறது.

கேரளாவைப் பொறுத்தளவில் கனமழை பெய்து வெள்ளம், இயற்கை சீற்றம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து வரும் நீர்தான் காரணம் என்று கேரள அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

அணை உடையும் நிலையில் உள்ளது, பாதுகாப்பற்ற நிலைக்கு மாறிவிட்டது என்றெல்லாம் தொடர்ந்து பிரச்சார களத்தில் முதன்மை கோஷமாக முன்னெடுக்கப்பட்டதால் கேரள மக்கள் மனதிலும் அணை குறித்து மாறுபட்ட மனோநிலை ஏற்பட்டு விட்டது.

இந்தநிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையை 139க்கும் கீழாக குறைக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கேரள நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் இந்த அணையை மொத்தமாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த கண்காணிப்பு குழு அணையில் தற்போது 137 அடி அளவுதான் நீர் இருக்கிறது, முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது, அங்கு 142 அடி வரை நீர் தேக்க முடியும், நிபுணர் குழு அறிக்கைகள் இதைத்தான் தெரிவிக்கின்றன என தமிழக அரசும் தெரிவித்தது.

இந்தநிலையில் கேரள அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணை மோசமான நிலையில்தான் உள்ளது. 126 ஆண்டுகள் பழமையானது என்பதால் அணை பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. திடீரென நீர் வரத்து அதிகமானால் ஆபத்து ஏற்படும். நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும்.

அணை நீர்மட்டம் தற்போது 137 அடி இருக்கும் போது 2735 கனஅடி வரையிலான நீரை தமிழ்நாடு பயன்படுத்தலாம். ஆனால் தமிழ்நாடு 2200 கனஅடி வரை மட்டுமே பயன்படுத்துகிறது.

தமிழ்நாடு தங்கள் மாநிலத்தில் வேறு எங்காவது நீர் சேகரிப்பு வழியை ஏற்படுத்தி அங்கு இந்த நீரை கொண்டு செல்லலாம். அல்லது வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்தலாம்.

முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அணையின் நீர் மட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.

இது நிலநடுக்க பகுதியில் உள்ளதால் பாதுகாப்பு இல்லை. இந்த அணை கட்டப்படும் போது பல அறிவியல் விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஆனால் இதை கண்காணிப்பு குழுவும், தமிழ்நாடு அரசும் உணரவில்லை.

நீர்மட்ட 142 அடியாக உயர்த்தினால் பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் கேரளாவில் வசிக்கும் 30 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அக்டோபர் 31-ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே தண்ணீரை குறைக்க வேண்டும். இந்த அணையை உடனே கைவிட்டுவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்.

இவ்வாறு கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x