Last Updated : 27 Oct, 2021 08:59 PM

 

Published : 27 Oct 2021 08:59 PM
Last Updated : 27 Oct 2021 08:59 PM

2014ல் இந்திய ஜனநாயகத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டவர் பிரதமர் மோடி: அமித் ஷா புகழாரம்

2014 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகம் வீழவிருந்தது. அதை வீழ்ச்சியில் இருந்து மீட்டவர் பிரதமர் மோடி. இந்திய மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்து பாஜக ஆட்சியைக் கொண்டுவந்தனர். மோடி தற்போது நல்லாட்சி வழங்கி வருகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி சேவை தினமாக பாஜகவினரால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17-ம்தேதி அன்று பிரதமரின் பிறந்தநாளை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக பாஜகவினர் கொண்டாடினர். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க் கைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதமாக, 17-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பாஜகவினர் நாடு முழுவதும் செயல்படுத்தினர்.

அதன் நீட்சியாக, அமித் ஷா பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால பொதுச் சேவையைப் பாராட்டிப் பேசியுள்ளார். டெல்லியில், ஜனநாயகத்தை வழங்குதல்: அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் 20 ஆண்டுகளாக நரேந்திர மோடி (National Conference of ‘Delivering Democracy: Two decades of Narendra Modi as head of government’) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தான் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.

அமித் ஷாவின் பேச்சு:

கடந்த 2014 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மையை வழங்கினர். அப்போது தேசத்தில் ஜனநாயகக் கட்டமைப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்துவிடலாம் என்ற நிலையில் இருந்தது. தேசத்தில் கொள்கை முடக்கம் நிலவியது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மாண்பு குறைந்து கொண்டிருந்தது. ஊழல் மலிந்த நாடாக இந்தியா இருந்தது. 12 லட்சம் கோடி ஊழல் நடந்திருந்தது. நாள்தோறும் ஊழல்மயமாக இருந்தது. அப்போது தான் மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மை கொடுத்தனர்.

அவர்களுக்கு பல கட்சிகள் சேர்ந்து நடத்தும் ஆட்சி முறை மீது சந்தேகம் வந்தது. மகாத்மா காந்தி உருவாக்கிய ராம் ராஜ்யா அல்லது கல்யாண் ராஜ்யா (மக்கள் நல அரசு) என்ற வார்த்தைகளின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பல கட்சிகள் கொண்ட ஓர் அரசால் அதனைக் கொடுக்க முடியாது என்று முடிவு செய்தனர். அவர்கள் பொறுமையுடன் ஒரு நல்ல முடிவு எடுத்தனர். பாஜகவை ஆட்சியில் அமர வைத்தனர். முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கொள்கை அல்லாத ஒரு கட்சிக்கு முழு சுதந்திரத்துடன் ஆட்சி செய்ய மக்கள் அதிகாரம் வழங்கினர்.

மோடி குஜராத் முதல்வராக 2001ல் தேர்ந்தெடுகப்பட்டார். அன்றிலிருந்து 20 ஆண்டு காலம் பொதுச் சேவையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நிர்வாகத் துறையில் அவர் ஏதும் பட்டம் பெறவில்லை. ஆனாலும் அவரது நிர்வாகத்தில் குஜராத் மேம்பட்டது.

அதன் பின்னர் பிரதமரானார். இப்போது தேசத்தின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். மனிதாபிமான அடிப்படையிலும் தேச நலனை அணுகுகிறார், பாதுகாப்பு பார்வையிலும் தேச நலனைக் காக்கிறார். தேவையுள்ளவர்களும் உதவிக்கரம் ஒருபுறம், தேவைப்படும்போது துல்லியத் தாக்குதல் மறுபுறம் என செயல்படுகிறார்.

இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.

ட்ரோல்களுக்கு பதிலடி:

சமூக வலைதளங்களில் தன்னை ட்ரோல் செய்பவர்கள் குறித்தும் அமித் ஷா பேசியுள்ளார். "நான் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறேன். அறிவிலிகளை வைத்துக் கொண்டு எந்த ஒரு தேசமும் முன்னேற முடியாது. அவர்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசியல் சாசன உரிமைகள் பற்றி அறியாதவர்கள் நிச்சயமாக அரசுக்கு எந்த பயனையும் தர முடியாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x