Published : 27 Oct 2021 12:30 PM
Last Updated : 27 Oct 2021 12:30 PM

பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு புதிய கட்சி: அமரீந்தர் சிங் அறிவிப்பு

சண்டிகர்

பஞ்சாபில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு புதிய கட்சித் தொடங்கப்போவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை காங்கிரஸ் மேலிடம்நியமித்தது.

அதைத் தொடர்ந்து சில நாட்களில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகினார். காங்கிரஸ் கட்சியுடன் கருத்துவேறுபாடு காரணமாக எந்தத் தொடர்பும் இன்றி இருக்கிறார், இன்னும் கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகவில்லை.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கிய அமரீந்தர் சிங் கடந்த மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி சென்று சந்தித்தார். இதுஅரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. பாஜகவில் அமரீந்தர் சேரப்போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், பஞ்சாப் எல்லைப் பிரச்சினை குறித்து அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் வைத்து புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் எனவும் அவர் அறிவித்தார். இதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. பாஜகவுடன் கூட்டணி அறிவித்து தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்தது.

இந்தநிலையில் அமரீந்தர் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆம், நான் புதிதாக கட்சி தொடங்குகிறேன். எனது வழக்கறிஞர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பெயரை இப்போது சொல்ல முடியாது, தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தவுடன் சொல்கிறேன். சின்னம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் பிறகு அறிவிப்போம். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளோம். இதற்கு முன்பு நான் அவரை மூன்று முறை சந்தித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x