Published : 26 Oct 2021 06:31 PM
Last Updated : 26 Oct 2021 06:31 PM

இனி குழந்தைகளுக்கு தலை கவசம் கட்டாயம்:  இருசக்கர வாகன பயணத்தில் வருகிறது மாற்றம்

புதுடெல்லி

இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129, 09.08.2019 தேதியிட்ட மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம் 2019 மூலம் திருத்தப்பட்டுள்ளது.

இப்பிரிவில் உள்ள இரண்டாவது விதியின் படி, மோட்டார் சைக்கிளில் செல்லும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை விதிகளின் மூலம் மத்திய அரசு எடுக்கலாம்.

21 அக்டோபர் 2021 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 758(ஈ)-யின் படி வரைவு விதிகளை உருவாக்கியுள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், கீழ்கண்டவாறு பரிந்துரைத்துள்ளது:

1) இருசக்கர வாகனத்தில் செல்லும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரிடம் இணைக்க பாதுகாப்பு சேணம் பயன்படுத்தப்படும்.

2) பின்னால் அமர்ந்து செல்லும் 9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் தலை கவசம் அணிந்திருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். பிஐஎஸ்-ஆல் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட தலை கவசங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

3) 4 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் செல்லும் மோட்டார் சைக்கிளின் வேகம் மணிக்கு 40 கிமீக்கு மேல் இருக்கக்கூடாது.

இவ்வாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x