கோவாக்சின் தடுப்பூசி:  24 மணிநேரத்தில் உலக சுகாதார நிறுவனம் அனுமதி

கோவாக்சின் தடுப்பூசி:  24 மணிநேரத்தில் உலக சுகாதார நிறுவனம் அனுமதி
Updated on
1 min read

கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த 24 மணி நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்வது அவசியமாகியிருக்கிறது. இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்கு பயணம் செய்யும்பட்சத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்தன.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சினுக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை. அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் எப்.டி.ஏ அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை தர மறுத்துவிட்டது. கூடுதல் தரவுகளை அனுப்புமாறு கூறி விட்டது.

இது இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள், வர்த்தகர்கள் எனப் பலதரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவாக்சின் இடம்பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த 24 மணி நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழு 24 மணி நேரத்திற்குள் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு அனுமதியைப் பரிந்துரைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. செய்தியாளர் சந்திப்பில் மார்கரெட் ஹாரிஸ் கூறுகையில், ‘‘கரோனா வைரஸ் நோய்க்கு பயன்படுத்தப்படும், இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தற்போது தரவை மதிப்பாய்வு செய்து வருகிறது.

அனைத்தும் சரியாக நடந்தால் மற்றும் குழு திருப்தி அடைந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பரிந்துரையை அளிக்கும் எனநாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in