Last Updated : 26 Oct, 2021 03:53 PM

 

Published : 26 Oct 2021 03:53 PM
Last Updated : 26 Oct 2021 03:53 PM

லக்கிம்பூர் கலவர வழக்கு; ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றபோது சிலரிடம் மட்டும் விசாரித்திருக்கிறீர்கள்: உ.பி. அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்

புதுடெல்லி 

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயிரக்கணக்கில் சாட்சிகள் இருந்தபோது அதில் சிலரின் வாக்குமூலத்தை மட்டும் பதிவு செய்துள்ளீர்களே என்று உ.பி. அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த 3-ம் தேதி விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்திப் போராடினர். அப்போது விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட பலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 20-ம் தேதி நடந்த விசாரணையின்போது, “உ.பி. போலீஸார் சாட்சியங்களிடம் விசாரணையை மெதுவாக நடத்துகிறார்கள், காலதாமதம் செய்கிறார்கள். அனைத்து சாட்சியங்களிடம் விசாரித்து 26-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உ.பி. அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, உ.பி. அரசு வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, கரிமா பிரசாத் ஆகியோர் சாட்சிகளிடம் பெற்ற வாக்குமூல அறிக்கையை இன்று தாக்கல் செய்தனர்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, உ.பி. அரசு வழக்கறிஞர்களிடம் “சிஆர்பிசி 164 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன்னிலையில்தானே சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. நாங்கள் அவ்வாறுதானே உத்தரவிட்டிருந்தோம் ” எனக் கேட்டது.

மேலும், ''தடயவியல் ஆய்வகம் மற்றும் மின்னணு ஆதாரங்கள் குறித்த ஆய்வறிக்கையைத் தயார் செய்யும் வல்லுநர்கள் குறித்த தங்கள் கவலைகளையும், பத்திரிகையாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்த இரு புகார்களையும் விசாரித்து அறிக்கை அளிக்கவும் உ.பி. அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

விவசாயிகள் நடத்திப் போராட்டத்தில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மக்கள் இருந்ததாகத் தகவல்கள் வந்தன. ஆனால், அவர்கள் குறித்து விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்களா? உ.பி. அரசு 68 சாட்சியங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், 30 பேரிடம் மட்டும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதே?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஹரிஸ் சால்வே, “நாங்கள் தாக்கல் செய்த 38 சாட்சியங்கள் வாக்குமூலத்தில் 23 பேர் மட்டுமே நேரில் பார்த்த சாட்சியங்கள். இது தொடர்பாக டிஜிட்டல் ஆதாரங்களையும் தாக்கல் செய்திருக்கிறோம். பல ஆய்வில் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் அமர்வு, ''இ்ந்த வழக்கில் மாநில அரசு தனியாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். வழக்கை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்'' எனத் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x