Published : 26 Oct 2021 12:31 PM
Last Updated : 26 Oct 2021 12:31 PM

‘‘என் பெயர் தாவூத் அல்ல’’- நவாப் மாலிக் குற்றச்சாட்டுக்கு சமீர் வாங்கடே தந்தை திட்டவட்ட மறுப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள சமீர் வாங்கேடயின் தந்தை, தனது பெயர் தனியன்தேவ், தாவூத் அல்ல என விளக்கமளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கடந்த 3-ம் தேதி கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் என்சிபி எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக் கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர் என பிரபாகர் செயில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கேடேயின் தனிப்பட்ட ஆவணங்களை ட்வீட் செய்து அவை போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.அதில் சமீர் தந்தை ஒரு முஸ்லிம் என்றும் அவரது பெயர் தாவூத் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீர் வான்கடே தனிப்பட்ட முறையில் மும்பை நீதிமன்றத்தில் இரண்டாவது பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் இது அவதூறு எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகளை சமீர் வாங்கேடேயின் தந்தை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனது பெயர் தனியன்தேவ், தாவூத் அல்ல. எனது மகன் மகாபாரதத்திஙல் வரும் அபிமன்யுவைப் போன்றவர், அவர் எதிரிகளால் சூழப்பட்டவர், ஆனால் அவர் அர்ஜுனைப் போல இந்த 'சக்ர வியூகத்தில் இருந்து வெளியே வருவார்.

பிறப்பால் சமீர் வான்கடே ஒரு முஸ்லீம் என்றும் அவரது உண்மையான பெயர் சமீர் தாவூத் வான்கடே என்றும் அமைச்சர் நவாப் மாலிக் கூறுவது தவறானது. அவர் மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்கிறார்.

சமீர் வான்கடேவின் பிறப்புச் சான்றிதழைக் கோரியதையும், அவர் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும் குற்றம்சாட்டியது வெட்கக் கேடானது.

எனது பெயர் தாவூத் வான்கடே என்பது முற்றிலும் பொய். சமீர் வான்கடேவின் பிறப்புச் சான்றிதழை வெளியிட்டு எங்களைக் களங்கப்படுத்தியதன் பின்னணியில் மாலிக்கின் சில தவறான நோக்கம் இருப்பதாக நினைக்கிறேன். என் பெயர் நான் பிறந்ததிலிருந்து தனியன்தேவ் வான்கடே இன்றும் அப்படித்தான்.

நான் எனது பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு மாநில அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். என் பெயர் தனியன்தேவ் அல்ல, தாவூத் என்பது அவர்களில் யாருக்கும் தெரியாதது எப்படி? மாலிக்கிற்கு மட்டும் எப்படி சந்தேகத்திற்குரிய ஆவணம் கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x