ரூ.25 கோடி பேரம் பேசியதாக புகார்: பிரபாகர் சாய்ல் பிறழ் சாட்சியாகி விட்டார்; நீதிமன்றத்தில் என்சிபி பதில் மனு

என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே
என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே
Updated on
1 min read

ஆரிய கான் போதைப்பொருள் வழக்கின் சாட்சியான பிரபாகர் சாய்ல் பிறழ் சாட்சியாகி விட்டார் என நீதிமன்றத்தில் என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கடந்த 3-ம் தேதி கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் என்சிபி எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரபாகர் செயில் கூறும்போது, “போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்னிடம் 9 முதல் 10 வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கினர். அதேபோல் என்சிபிஅதிகாரிகளும், மேலும் சிலரும்ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக் கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர்” என்றார்

ஆனால் இதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் மும்பை நீதிமன்றத்தில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘‘ ஆரிய கான் போதைப்பொருள் வழக்கின் சாட்சியான பிரபாகர் சாய்ல் பிறழ் சாட்சியாகி விட்டார்’’ என தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in