Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

மத்திய அமைச்சர் ராஜ்நாத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு: தமிழக நிலைமை குறித்து ஆலோசனை

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை

டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சந்தித்துப் பேசினார்.

கடந்த செப்டம்பர் 18-ம் தேதி தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். அதன்பின், 2-வது முறையாக கடந்த 22-ம்தேதி டெல்லி சென்ற அவர், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

‘தமிழகத்தின் வளர்ச்சி, தமிழக மக்களின் நலன் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக நலனுக்கு தேவையான அனைத்து உதவிகளைச் செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்தார்’ என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆளுநராக இருப்பவர்கள் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திப்பது வழக்கமானது. ஆனால், தமிழக ஆளுநர், பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு தொழில்வழித்தடம் திட்டம் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழகம் நீண்டகடற்பரப்பை கொண்ட எல்லையோர மாநிலம் என்பதால் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாகவும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x