Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

ஷாருக் கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி தருமாறு பேரம் பேசியதாக புகார்: என்சிபி அதிகாரிகள் மறுப்பு

மும்பை

சிறையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடிக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் பேரம் பேசியதாக சாட்சி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதை என்சிபி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கடந்த 3-ம் தேதி கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரபாகர் செயில் கூறும்போது, “போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்னிடம் 9 முதல் 10 வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கினர். அதேபோல் என்சிபிஅதிகாரிகளும், மேலும் சிலரும்ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக் கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர்” என்றார். சாம் டிசவுசா என்ற அதிகாரிதான் இந்த பேரத்தைப் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். விசாரணை அமைப்பின் பெயரைகெடுப்பதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x