Published : 18 Mar 2016 09:00 AM
Last Updated : 18 Mar 2016 09:00 AM

ரோஜா ஓராண்டு சஸ்பெண்ட்: சபாநாயகரின் உத்தரவுக்கு தடை

ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து நடிகை ரோஜாவை ஓராண்டு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைக்கு ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவையில் கடந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது, மீட்டர் வட்டி குறித்து விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களை ரோஜா தரக்குறைவாக விமர்சித்தாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவையில் இருந்து ரோஜாவை ஓராண்டு சஸ்பெண்ட் சபாநாயகர் அறிவித்தார்.

இதை எதிர்த்து ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ரோஜா வழக்கு தொடர்ந்தார். ஆனால் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து ரோஜா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். “அரசியல் காரணங்களுக்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசன விரோதம்” என்று ரோஜா தனது மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை, “அவையில் கலந்துகொள்ள ரோஜாவுக்கு உடனே அனுமதி வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தது. இதுகுறித்து இ-மெயில் உத்தரவையும் வழங்கியது.

இந்நிலையில் இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உயர் நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. இதையடுத்து நேற்று வழங்கிய தீர்ப்பில், ஆந்திர சபாநாயகரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

நீதிமன்ற உத்தரவின் நகலை சட்டப்பேரவை செயலாளரிடம் ரோஜா நேற்று வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை (இன்று) பங்கேற்பேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x