Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM

யாதாத்ரி கோயில் விமான கோபுரத்துக்கு 125 கிலோவில் தங்க தகடுகள்: தெலங்கானா முதல்வர் 1 கிலோ தங்கம் காணிக்கை

தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில்.

யாதாத்ரி

தெலங்கானாவில் கட்டப்பட்டு வரும் யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில் விமான கோபுரத்துக்கு 125 கிலோ எடையில் தங்கத் தகடுகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தனது பங்காக ஒரு கிலோ 116 கிராம் தங்கத்தை காணிக்கையாக தருவதாக அறிவித்துள்ளார்.

ரூ.1,800 கோடியில் புதுப்பிப்பு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயில் ரூ.1,800 கோடிசெலவில், திருப்பதி ஏழுமலை யான் கோயிலைப் போன்று மிகவும் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்படுகிறது. இக்கோயில் கட்டு மானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, கோயில் விமான கோபுரத்துக்கு தங்கத் தகடுகள் பொருத்தவேண்டுமென முடிவு செய்யப் பட்டது. இதற்காக 125 கிலோ தங்கம் தேவைப்படும் என, திருப்பதி ஏழுமலையான் கோயில் விமான கோபுரத்தை வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர். இதற்காக ரூ.60கோடி மதிப்பிலான தங்கம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் ஒப்புதல் வழங்கியதோடு, தெலங்கானா மக்கள் அனைவரும் இதற்கு நன்கொடை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், அவரே ஒரு கிலோ 116 கிராம் தங்கம் காணிக்கையாக வழங்குவதாக அறிவித்தார்.

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என முதல் நாளே22 கிலோ தங்கத்தை நன்கொடையாகத் தர முன் வந்துள்ளனர்.

விரைவில் 125 கிலோ தங்கம் காணிக்கையாக பெறப்பட்ட பின்னர் இதற்கான பணிகள்தொடங்கப்படும் என்று கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x