Last Updated : 20 Oct, 2021 06:35 PM

 

Published : 20 Oct 2021 06:35 PM
Last Updated : 20 Oct 2021 06:35 PM

கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எங்கு சென்றாலும் என்னை கைது செய்கிறார்கள்: பிரியங்கா ஆவேசம்

பிரியங்கா காந்தி

''கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எங்கு சென்றாலும் என்னை தடுத்துநிறுத்தி கைது செய்கிறார்கள்'' என்று போலீஸ் காவலில் இறந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தை சந்திக்க ஆக்ரா செல்லும் வழியில் கைதான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா அருகே அக்டோபர் 17 ஆம் தேதி கிடங்கு ஒன்றிலிருந்து இருந்து 25 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக ஆக்ரா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் துப்புரவு தொழிலாளி அருண் வால்மீகி என்பவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி, நேற்றிரவு போலீஸ் காவலில் இறந்தார்.

போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை புறப்பட்டு சென்றபோது லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள முதல் சுங்கச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது. பிரியங்கா கைது செய்யப்பட்டார்.

பிரியங்காவை தடுத்து நிறுத்திய ​​போலீஸார் அவரிடம், "உங்களுக்கு அனுமதி இல்லை, நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது. இப்பகுதியில் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தாங்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஆக்ராவுக்கு செல்லவும் அனுமதி இல்லை" என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா, "நான் கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல முயலும் போதெல்லாம், அவர்கள் (நிர்வாகம்) என்னைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்... அவர்களின் இத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு நிறைய சிரமத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.

துப்புரவு தொழிலாளர் மரணம் குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

போலீஸ் காவலில் ஒருவர் அடித்து கொல்லப்படுகிறார், எங்கே நீதி? ஆக்ரா போலீஸ் காவலில் அருண் வால்மீகி இறந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. வால்மீகி ஜெயந்தி தினத்தன்று, அவரது செய்திகளுக்கு எதிராக உ.பி. அரசு செயல்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது உயர்மட்ட விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வேண்டும்.

போலீஸ் காவலில் உயிரிழந்துள்ள துப்புரவு தொழிலாளி அருண் வால்மீகியின் குடும்பம் நீதி கோரி நிற்கிறது. நான் அந்த குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்புகிறேன். நான் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்றால் உ.பி. அரசு ஏன் பயப்படுகிறது? நான் ஏன் தடுக்கப்படுகிறேன்? இன்று கடவுள் வால்மீகி ஜெயந்தி. பிரதமர் மோடி புத்தரை பற்றி பெரிதாக பேசினார். ஆனால் இது அவரது செய்தியை அடித்து காலிசெய்வதாக உள்ளது"

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு குறித்து ஆக்ராவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் அதிகாரி முனிராஜ் கூறியதாவது:

''கிடங்கு ஒன்றிலிருந்து ரூ. 25 லட்சம் காணாமல் போன வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு துப்புரவு தொழிலாளி போலீஸார் விசாரணையில், தான் திருடியதாக ​​அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவரது வீட்டில் இருந்து ரூ .15 லட்சத்தையும் போலீசார் மீட்டனர், காவலில் இருந்தபோது அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. போலீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார்.

துப்புரவு தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x