குஷிநகர் விமான நிலையம் திறப்பு; கொழும்பு முதல் விமானத்தில் வந்த நமல் ராஜபக்சே; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

குஷிநகர் விமான நிலையம் திறப்பு; கொழும்பு முதல் விமானத்தில் வந்த நமல் ராஜபக்சே; பிரதமர் மோடியுடன் சந்திப்பு
Updated on
1 min read

குஷிநகர் விமான நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்க கொழும்புவில் இருந்து வந்த முதல் விமானத்தில் அந்நாட்டு அமைச்சரும், இலங்கை நாட்டு பிரதமர் ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே வந்தர். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.

உ.பி.யில் இன்று குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் 12 நாடுகளை சேர்ந்த தூதர்கள் கலந்து கொண்டனர்.

மங்கோலியா, மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, லாவோ பிடிஆர், இலங்கை, பூடான், கொரியா குடியரசு, நேபாளம், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் விமானம் முதலில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்தனர்.

இதில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் 12 பேர் இடம் பெற்றிருந்ததுடன் புத்தரின் புனித நூல்களையும், குஷிநகரில் காட்சிப்படுத்துவற்காக எடுத்து வந்தனர். இந்த பிரதிநிதிகள் குழுவில், இலங்கை புத்த மதத்தின் நான்கு பிரிவுகளான அஸ்கிரியா, ஆமராபுரா, ராமன்யா, மால்வட்டா ஆகிய நிகாதாக்களைச் சேர்ந்த அணுநாயகர்கள் (துணைத்தலைவர்கள்) மற்றும் இலங்கை அரசின் கேபினட் அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையில் ஐந்து அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நமல் ராஜபக்சே கூறுகையில் ‘‘இரு நாடுகளுக்கிடையேயான வலுப்படுத்த உறவை வலுப்படுத்த இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்களை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறினார்.
பின்னர் பிரதமர் மோடியை நமல் ராஜ்பக்சே சந்தித்து பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in