உத்தரகாண்ட் மழை வெள்ளம்; 46 பேர் பலி: சேத நிலவரத்தை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் அமித் ஷா

உத்தரகாண்ட் மழை வெள்ளம்; 46 பேர் பலி: சேத நிலவரத்தை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் அமித் ஷா
Updated on
1 min read

உத்தரகாண்ட் மழை வெள்ள பாதிப்பை உள் துறை அமைச்சர் அமித் ஷா நாளை நேரில் ஆய்வு செய்கிறார். இன்று மாலை உத்தரகாண்ட் செல்லும் அவர், அங்கு முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கிறார்.

கடந்த 10-ம்தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைஉருவானது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன.

இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அக்டோபர் 17 தொடங்கி 19 ஆம் தேதி வரை மட்டுமே 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நைனிடால், அல்மோரா, சம்பாவத், பித்ரோகர், உத்தம் சிங் நகர், சமோலி, பாகேஸ்வர் ஆகிய பகுதிகளில் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 9 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், நிலச்சரிவாலும் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மாலை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in