Published : 19 Oct 2021 04:22 PM
Last Updated : 19 Oct 2021 04:22 PM

இந்துக்களுக்கு எதிரான மனநிலை வங்க தேசத்தில் வளர்வது ஆபத்து; ஜிகாதிஸ்தான் எனப் பெயர் மாற்றுங்கள்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சாடல்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் | கோப்புப்படம்

புதுடெல்லி

வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான மனநிலை வளர்வது ஆபத்தான போக்கு. இனிமேல் வங்கதேசம் என்று அழைக்காமல் ஜிகாதிஸ்தான் என்று அழைக்க வேண்டும் என்று வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சாடியுள்ளார்.

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளார். அவர் எழுதிய லஜ்ஜா எனும் நூலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னுடைய தாய்நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் கோமிலா நகரில் சமீபத்தில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதில் நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் பல மாவட்டங்களுக்குப் பரவியது.

இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''வங்கதேசம் என்று அழைக்க நான் உண்மையில் விரும்பவில்லை. இப்போது அந்த நாடு ஜிகாதிஸ்தானாக மாறிவிட்டது. அனைத்து அரசுகளும், தற்போது ஆளும் அரசு கூட மதத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. இஸ்லாத்தை அரசின் அதிகாரபூர்வமாக மதமாக மாற்றியுள்ளார்கள். இந்துக்கள், பவுத்தர்கள் மூன்றாம் தரக் குடிமக்களாக மாற்றப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டதுபோல் உள்ளனர்.

துர்கா பூஜையின்போது இந்துக்கள் மீது ஒவ்வொரு ஆண்டும் தாக்குதல் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளன. இது ஷேக் ஹசினாவுக்கு நன்கு தெரியும். ஏன் பாதுகாப்பை பலப்படுத்தவில்லை, இந்து கோயில்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவி்ல்லை?

ஏராளமான இந்துக்கள் வங்கதேசத்தை விட்டுச் சென்றுவிட்டனர். இருக்கின்ற மக்களுக்காவது அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இந்துக்களுக்கு எதிரான மனநிலை வங்கதேசத்தில் வளர்வது ஆபத்தானது. வங்கதேசம் தனியாகப் பிரிந்தபோது 30 சதவீதம் இந்துக்கள் இருந்தார்கள். தற்போது 9 சதவீதமாகக் குறைந்துவிட்டனர்.

இந்து குடும்பம் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டது குறித்து கடந்த 1993-ம் ஆண்டு லஜ்ஜா என்ற நாவலை எழுதினேன். அது தடை செய்யப்பட்டது. இதனால்தான் அந்நாட்டிலிருந்து வெளியேறினேன். இது அத்தோடு நிற்கவில்லை. தொடர்ந்து அதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்துக்கள் முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அந்த இடத்தைத் தாங்கள் பிடிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்புகிறார்கள்.

ஏராளமான மசூதிகள், மதரஸாக்கள் வங்கதேசத்தில் தேவையின்றிக் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். ஒதுக்குப்புறமான கிராமங்களில் உள்ள மதரஸாக்களில் பிரசங்கம் செய்பவர்கள் தங்கள் மனதில் தோன்றுவதை இஸ்லாம் என்ற பெயரில் பேசுகிறார்கள்.

படிப்பறிவில்லாத இளைஞர்களை அவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள், அவர்களுக்கு அரபியும் தெரியாது. எப்போதெல்லாம் வதந்திகள் பரவுகின்றனவோ அப்போதெல்லாம் கலவரங்கள் நடக்கின்றன.
மதச்சார்பற்ற தன்மை ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அரசுக்கும், மதத்துக்கும் கண்டிப்பாக இடைவெளி தேவை. இந்துக்களின் கடைகள், வீடுகள் கோயில்களை இடித்தமைக்கு முஸ்லிம்களை மட்டும் குறைகூறக் கூடாது. அதற்கான வாய்ப்புகளை, வசதிகளை அரசு உண்டாக்கியது. அனைத்தும் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம்''.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x