Published : 19 Oct 2021 12:36 PM
Last Updated : 19 Oct 2021 12:36 PM

இரு மாதங்களில் 2-வது மூடல்: ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை மூடுகிறது ரயில்வே துறை

கோப்புப்படம்

புதுடெல்லி

நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை (ஐஆர்எஸ்டிசி) நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களில் ரயில்வே துறைக்கு உட்பட்ட கழங்களில் 2-வது பிரிவு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே துறையில் ரயில்களை மாற்று எரிபொருளில் இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட கழகமான, ஐஆர்ஓஏஎப் கழகத்தை நிரந்தரமாக மூடியது.

மாற்று எரிபொருளுக்கான இந்தியன் ரயில்வேஸ் அமைப்பு என்ற அமைப்பின் மூலம் ரயில்களை டீசல் அல்லாத மாற்று எரிபொருளான ஹைட்ரஜன், சூரிய ஒளி மூலம் ஓடவைத்தல் குறித்த ஆய்வுகள் நடந்து வந்தன. அதற்கு ஏற்ப ஒரு ரயிலில் உள்ள ஃபேன், லைட், உள்ளிட்ட அனைத்தும் சூரிய ஒளியில் இயங்குமாறு மாற்றப்பட்டு ரயில் வெற்றிகரமாக இயக்கிக் காட்டப்பட்டது.

இந்நிலையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கழகத்தையும் மத்திய ரயில்வே துறை மூடியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பரிந்துரையான, “அரசின் அமைப்புகளை, நிறுவனங்களை முறைப்படுத்தும் பணியில் சரியாகச் செயல்படாதவற்றை மூடிவிடுதல் அல்லது வேறு அமைச்சகங்களின் அமைப்புடன் இணைத்துவிடுதல்” என்பதை ஏற்று இந்த இரு அமைப்புகளும் மூடப்பட்டன.

ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம் நிரந்தரமாக மூடப்பட்டது குறித்து திங்கள்கிழமை இரவு ரயில்வே வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்த ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகங்கள் இதுவரை கவனித்து வந்த திட்டங்கள் அனைத்தும் அந்தந்த மண்டல ரயில் நிலையங்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஐஆர்எஸ்டிசி கடந்த மார்ச் 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினலை மறுசீரமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது. சமீபத்தில் சண்டிகரில் உள்ள ரயில் ஆர்கேட், கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்த ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியிருந்தது. தென்னிந்தியாவில் ஏறக்குறைய 90க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, நிர்வகிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஐஆர்எஸ்டிசி திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

ரயில்களுக்கு டீசல் எரிபொருளைத் தவிர மாற்று எரிபொருளைத் தயாரிப்பது, ரயில்களை மாற்று எரிபொருளில் இயக்குவது ஆகியவற்றை உருவாக்க அமைக்கப்பட்ட ஐஆர்ஓஏஎஃப் கடந்த செப்டம்பர் மாதம் மூடப்பட்டது.

ரயில்களை சோலார் மற்றும் ஹைட்ரஜன் மூலம் இயக்குவது போன்ற திட்டங்களை ஐஆர்ஓஏஎஃப் செய்துவந்தது. அவை முதன்மை தலைமை மின்பொறியாளரிடமும், வடக்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரிக்கும் மாற்றப்பட்டு, அந்த அமைப்பு இழுத்து மூடப்பட்டது.

இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம், ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்பட்டிருந்த நிலையில் திடீரென மூடப்பட்டது. இந்த ஹைட்ரஜன் ரயிலை, வடக்கு ரயில்வேயில் சோனிபட்-ஜிந்த் வரை 89.கி.மீ. இயக்கிப் பார்க்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், டீசல், மின்சாரத்தில் இயக்கும் இரு இன்ஜின்களை ஹைட்ரஜனில் இயக்குவது போல் மாற்றவும் ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.2.5 கோடி அளவில் எரிபொருள் செலவு மிச்சமாகும்.

ரயில்களில் உள்ள விளக்கு, காற்றாடி, சார்ஜர் உள்ளிட்வற்றை சூரிய ஒளி சக்தி மூலம் இயக்கும் திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. மேலும் ரயில்களை சிஎன்ஜி வாயு மூலம் இயக்கவும் ஆய்வுகள் நடந்து வந்தன. ஆனால், திடீரென ஐஆர்ஓஏஎப் அமைப்பைக் கடந்த மாதம் மத்திய அரசு மூடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x