Published : 18 Oct 2021 07:06 PM
Last Updated : 18 Oct 2021 07:06 PM

பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தேவையா?- மத்திய அமைச்சர் கேள்வி

புதுடெல்லி

இருநாடுகளிடையே உறவு சரியில்லாத நிலையில் பாகிஸ்தானுடன் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தேவையா? அதனை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

துபாயில் வரும் அக்டோபர் 24 அன்று இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளன. ஆனால், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டி20 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர் அரவிந்த் குமார் சாஹ், சஹரன்பூரைச் சேர்ந்த தச்சர் சாகர் அகமது ஆகியோர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை, பிஹாரைச் சேர்ந்த ராஜா ரேஷி மற்றும் ஜோகிந்தர் ரெஷி ஆகியோர் குல்காம் மாவட்டத்தின் வான்போ என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர், இதில் மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளி காயமடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது இரண்டு நாட்களில் நிகழ்த்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் ஆகும். ஞாயிற்றுக்கிழமை நடந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான புதிய தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஒரு அமைப்பு, காஷ்மீர் பிராந்தியத்தை விட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறச் செய்யும்வகையில் அது ஒரு பயமுறுத்தலாக இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது:

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அக்டோபர் தொடங்கி கடந்த 18 நாட்களில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 24 அன்று துபாயில் நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நமக்கு தேவையா? என்ற எண்ணம் எழுந்துள்ளது.

எனவே, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் நன்றாக இல்லை என்பதால் இந்தக் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி அவசியம்தானா என்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x