

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் வீடு அப்படியே விழுந்து அடித்துச் செல்லப்பட்ட காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து அடுத்தடுத்து உடல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரு ஆற்றின் விளிம்பில் நிற்கும் இரண்டு மாடி வீடு மெதுவாக சாய்ந்து விழுகிறது. அந்த கட்டடம் அப்படியே சேற்று நீரில் அடித்துச் செல்லப்படுகிறது.
வீடு அடித்துச் செல்வதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்தபோது வீடு காலியாக இருந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததால் சிலர் வீட்டின் அருகில் உள்ள சாலையில் நின்று பாதுகாப்பு கருதி பின்நோக்கி ஓடினர்.