

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பான வழக்கு வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து கடந்த ஓராண்டாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டம் ஓராண்டு முடியவுள்ள நிலையில் கடந்த மாதத்தில் பாரத் பந்த் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்குவரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
அன்றைய தினத்தில் உச்ச நீதிமன்றம் போராட்டம் தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசுக்கும் சில உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எனத் தெரிகிறது.
தலைமை நீதிபதிக்கு கடிதம்
இந்த விவகாரத்தில் நல்ல முடிவை நீதிமன்றம் எடுக்கவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்திய விவசாயிகள் அமைப்பின் நிர்வாகி பி.செங்கல் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக நீதிமன்றம் முடிவு எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் போராட்டத்தை தொடர்வோம் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பினர் அறிவித்துள்ளனர். சாலைமறியல், ரயில் மறியல் போராட்டத்தையும் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். -பிடிஐ