Published : 17 Oct 2021 11:42 AM
Last Updated : 17 Oct 2021 11:42 AM

கேரளாவில் கனமழை, நிலச்சரிவு- 8  பேர் பலி: மண்ணில் புதைந்த 22 பேர்;  மீட்பு பணியில் ராணுவம்

திருவனந்தபுரம்

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர்உயிரிழந்துள்ள நிலையில் 22 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் கோட்டயம் மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் இடிந்து விழுந்தன. தகவலறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர், 3 பேரின் உடல்களை மீட்டனர். கோட்டயம் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை.

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இடுக்கி மாவட்டம் பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் 10 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கோட்டயம் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் கனமழையால் 22 முக்கிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் தீவிர மழை சற்று குறைந்துள்ளது, இருப்பினும், இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் அதன் பாதிப்பு தொடர்கிறது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கோட்டயம் உட்பட மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி முகாம்களைத் தொடங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முகாம்கள், சானிடைசர்கள், குடிநீர், மருந்துகள் முகாம்களில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x