Published : 17 Oct 2021 03:06 AM
Last Updated : 17 Oct 2021 03:06 AM

கேரள நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு: தொடர் கனமழையால் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்சாரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அரசுப் பேருந்து ஒன்று நேற்று சிக்கியது. பின்னர், அதில் இருந்த பயணிகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.படம்: பிடிஐ

கொச்சி

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர்உயிரிழந்தனர். அங்கு 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் கோட்டயம் மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் இடிந்து விழுந்தன. தகவலறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர், 3 பேரின் உடல்களை மீட்டனர். இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x