Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

ஆந்திர மாநிலத்தில் விபரீத தசரா உற்சவம்; உருட்டுக்கட்டை அடியால் 4 பேர் கவலைக்கிடம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திராவின் கர்னூல் மாவட்ட கிராமங்களில் தசரா உற்சவத்தின் நிறைவு நாளில் கிராம மக்கள்ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டைகளால் தாக்கி கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்தது. 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கர்னூல் மாவட்டம் தேவரகொண்டா பகுதியில் சுமார் 800 அடி உயரத்தில் மல்லேஸ்வர சுவாமி சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள இரு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் தசரா உற்சவத்தின் நிறைவு நாளில் ’பண்ணி உற்சவம்’ நடத்தப்படுகிறது. உற்சவத்தின்போது தாயாரை ஒரு பிரிவினரும், சுவாமியை மற்றொரு பிரிவினரும் (உற்சவ மூர்த்திகளை) மலையிலிருந்து கீழே எடுத்து வருகின்றனர். அப்போது தீப்பந்தத்தையும் கொண்டு வருவது வழக்கம்.

இறுதியில் உற்சவ மூர்த்திகளை கைப்பற்ற இரு கிராம மக்களும் முயற்சி செய்வார்கள். அப்போது உருட்டுக்கட்டைகளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வார்கள். இந்த பண்ணி உற்சவத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.

எனினும் தடையை மீறி இரு கிராமங்களின் மக்களும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் விடிய, விடிய பண்ணி உற்சவத்தை நடத்தினர். ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டைகளால் தாக்கி கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர்.

இவர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையிலும் தேவரகொண்ட அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து தேவரகொண்டா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x