Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான நேற்று காலை, கோயிலுக்குள் அமைக்கப்பட்ட மாதிரி குளத்தில் சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயில்பிரம்மோற்சவ விழா நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறை வடைந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலால்இம்முறை ஏகாந்தமாக மாடவீதிகளில் வாகன சேவைகள் இன்றி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 7-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்ட பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை, இரவு கோயிலுக்குள்உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஏகாந்தமாக வாகன சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே கடந்த 11-ம் தேதி கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் கலந்து கொண்டு, அரசு சார்பில் சுவாமிக்குபட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். மேலும், திருப்பதியில் சிறுவர்களுக்கென இதயநோய் பிரிவு இலவச மருத்துவமனை, அலிபிரியில், ரூ. 15 கோடியில் கட்டப்பட்ட கோ மந்திரம், ரூ. 25 கோடியில் சீரமைக்கப்பட்ட அலிபிரி நடைபாதை மற்றும் திருமலையில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன பூந்தி மடப்பள்ளி போன்றவற்றை முதல்வர் ஜெகன்தொடங்கி வைத்தார். மேலும், கன்னடம், இந்தி மொழிகளில் தேவஸ்தான பக்தி சேனலையும் (எஸ்விபிசி) முதல்வர் ஜெகன்தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் வியாழக்கிழமை காலை, 8-ம் நாள், தேரோட்டத்துக்குப் பதில்சர்வபூபால வாகனத்திலும், அன்றிரவு குதிரை வாகனத்தில் உற்சவர் காட்சியளித்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை கோயிலுக்குள் அமைக்கப்பட்ட குளத்தில், சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் ஆகம விதிகளின்படி நடத்தப்பட்டன.

இதனை முன்னிட்டு, உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், சக்கர ஸ்நான நிகழ்வு நடைபெற்றது.

இதில், உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி என்.வி. ரமணா தனது குடும்பத்தாருடன் கலந்துகொண்டார். ஜீயர்கள், அதிகாரிகள், அச்சகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து நேற்றிரவுபிரம்மோற்சவ கொடியிறக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்துடன் 9 நாட்கள் நடைபெற்ற பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x