Published : 15 Oct 2021 06:42 PM
Last Updated : 15 Oct 2021 06:42 PM

இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்கு: பிரதமர் மோடி திட்டவட்டம்

இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த, 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இத்துறை இணையமைச்சர் அஜய் பட் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமர் தனது உரையில் கூறியதாவது:

விஜயதசமி தினத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கு பூஜை செய்வது வழக்கம் என குறிப்பிட்டார். இந்தியாவில், சக்தியை படைப்புக்கான வழியாக பார்க்கிறோம். அதே உணர்வுடன் நாடு பலத்தை நோக்கி செல்கிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.

சுதந்திரம் பெற்ற பின்னர், முதல்முறையாக முக்கிய சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, ஒற்றை சாளர அமைப்பு பின்பற்றப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பம் காணப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி தேசம் சென்றுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் முடிக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக உருவாகியுள்ள இந்த 7 நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனங்கள் முன்னிலை வகிக்க வேண்டும், ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கப்பட வேண்டும்.

சுயசார்பு இந்தியா கொள்கையின் கீழ், இந்தியாவை தனது சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதுமே, நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவை தனது சொந்த பலத்திலேயே உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளோம்.

ஆயுத தொழிற்சாலைகளை மாற்றியமைப்பது மற்றும் 7 நிறுவனங்களை உருவாக்குவது வலுவான இந்தியாவை உருவாக்கும் கலாமின் கனவுக்கு பலம் அளிக்கும்.

சமீபத்திய ஆண்டுகளில் கொள்கை மாற்றங்களின் முடிவுகளை நாடு கண்டு வருவதால், நாட்டின் இளைஞர்களுக்கும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 325 சதவீதம் அதிகரித்துள்ளது. நமது நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் நிபுணத்துவத்தை மட்டும் ஏற்படுத்தாமல், உலகளாவிய பிராண்டாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x