

தலிபான்கள் மாறினாலும்கூட பாகிஸ்தான் மாறாது. தலிபான்களுடன், சீனா, பாகிஸ்தான் கூட்டு சேரவும் வாய்ப்புள்ளது. ஆதலால், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 96-வது ஆண்டு விழா மற்றும் விஜயதசமி பண்டிகைக் கொண்டாட்டம் நாக்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பைப் பார்வையிட்ட தலைவர் மோகன் பாகவத், கொடி ஏற்றி, சாஸ்திர பூஜைகள் செய்தார்.
அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
''தலிபான்கள் வரலாற்றைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். சீனாவும், பாகிஸ்தானும் இன்று தலிபான்களுக்கு ஆதரவு தருகின்றன. தலிபான் மாறினால்கூட, பாகிஸ்தான் மாறவில்லை. இந்தியாவைப் பற்றிய சீனாவின் கண்ணோட்டம் மாறியிருக்கிறதா? பேச்சுவாரத்தை நடக்கும்போது, நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உஷாராக இருப்பதும், தயாராக இருப்பதும் அவசியம்.
தலிபான்களின் முன்கணிப்பு தீவிர வெறி, கொடூரச்செயல் மற்றும் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதம் தலிபான்களைப் பற்றி அனைவரையும் அச்சுறுத்தப் போதுமானது. ஆனால், தலிபான்களுடன் சீனா, பாகிஸ்தான், துருக்கி ஆகியவை புனிதமற்ற கூட்டணியை அமைத்துள்ளன. அப்தாலிக்குப் பின், நமது தேசத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகள் மீண்டும் கவலைக்குரியதாக மாறியுள்ளன.
நம்முடைய எல்லைப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். நில எல்லை மட்டுமின்றி, கடல்வழி எல்லைகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஏனென்றால், கடல்வழிதான் தாக்குதல் சத்தமின்றி நடக்கும்.
சட்டவிரோதமாக நடக்கும் ஊடுருவல் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். குடியுரிமைக்கான பதிவேட்டை உருவாக்குவதன் மூலம் இதுபோன்ற ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்து குடியுரிமை உரிமைகளைப் பறிக்க முடியும்.
காஷ்மீரில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி, அப்பாவி இந்துக்கள் குறி வைக்கப்படுகிறார்கள். இதுபோன்ற செயல் காஷ்மீர் மறுகட்டமைப்பு செய்யும் பணியைக் குலைக்கும் முயற்சியாகும். மத்திய அரசு தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி அழிக்க வேண்டும்''.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்