Last Updated : 14 Oct, 2021 10:12 AM

 

Published : 14 Oct 2021 10:12 AM
Last Updated : 14 Oct 2021 10:12 AM

இந்த தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி என்று நான் நினைக்கவில்லை: வீர சாவர்க்கர் பேரன் கருத்து

சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்கர் பேட்டி அளித்த காட்சி | படம் ஏஎன்ஐ

மும்பை


இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திதான் என்று நான் நினைக்கவில்லை என்று வீர சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்றுமுன்தினம் நடந்தது.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசுகையில் “கடந்த 1911ம் ஆண்டுதான் முதன்முதலில் சாவர்கர் சிறைக்குச் சென்று 6 மாதங்களுக்குபின் முதல் மனுவை எழுதினார். அதன்பின் மகாத்மா காந்தி அறிவுரையின் படி அடுத்த கருணை மனுவை எழுதினார் என்று வரலாறு கூறுகிறது” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக வரலாற்றை திரித்து எழுத முயல்கிறது என குற்றம்சாட்டினர்.

ஏஐஎம்ஐ கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் வீர சாவர்க்கர் பற்றிப் பேசிய ராஜ்நாத் சிங்கிற்குப் பதிலடி கொடுத்தார். ஒவைசி அளித்த பேட்டியில் “ ‘பாஜகவினர் வரலாற்றை சிதைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு சாவர்க்கரை தேசத்தின் தந்தையாக்கி விடுவார்கள். ’’ எனத் தெரிவி்த்தார்

இந்நிலையில் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில் “ இந்தியா போன்ற நாடுகளில் தேசப்பிதா என ஒருவர் மட்டும் இருக்க முடியாது. ஆயிரக்கணக்கான தலைவர்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டார்கள்.

ஆதலால், இந்த தேசத்தின் தந்தை மகாத்மா காந்திதான் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற நாட்டுக்கு ஒரு தலைவர் மட்டும் இருக்க முடியாது.

என்னைப் பொருத்தவரை தேசத்தந்தை என்ற கருத்துருவையே ஏற்க முடியாது, அதற்கு நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். வீர சாவர்்கரை யாரும் தேசத்தந்தையாக்க வேண்டும் என யாரும் கேட்கவில்லை.ஏனென்றால் இந்த கருத்தேஏற்க முடியாத ஒன்று” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x