Published : 12 Oct 2021 10:05 PM
Last Updated : 12 Oct 2021 10:05 PM

பெங்களூருவில் 47 இடங்களில் வருமான வரித்துறை சோதனை ரூ.750 கோடி பணம் கண்டுபிடிப்பு

பிரதிநிதித்துவப் படம்

பெங்களூரு 

பெங்களூருவை சேர்ந்த நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் ரூ.750 கோடி கணக்கில் காட்டாத பணம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நீர்ப்பாசனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் பெங்களூருவைச் சேர்ந்த மூன்று முக்கிய ஒப்பந்ததார நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடந்த 07.10.2021 அன்று நான்கு மாநிலங்களில் மொத்தம் 47 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களும் போலியான கொள்முதல் ரசீதுகள், தொழிலாளர் செலவினங்களில் பணவீக்கம், போலி துணை ஒப்பந்த செலவுகள் போன்றவற்றை பதிவு செய்து வருமானத்தை மறைத்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

நாற்பதுக்கும் மேற்பட்ட நனிநபர்கள் கட்டுமானத் தொழிலுக்கு தொடர்பில்லாத நபர்கள் மீது இதில் ஒரு நிறுவனம் போலியான துணை ஒப்பந்த செலவுகளைக் காட்டி உள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இந்த மூன்று நிறுவனங்களில் ஒரு குழுமம், தொழிலாளர் செலவினங்களில் ரூ.382 கோடி முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்டது . மற்றொரு குழுமம் ரூ.105 கோடி அளவுக்கு செயல்பாட்டில் இல்லா காகித நிறுவனங்களிடமிருந்து போலி ரசீதுகளைப் பெற்றுள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த மூன்று குழுமங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கை மூலம் 750 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதில் 487 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை அந்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இது தொடர்பாக மேலும் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x