Published : 11 Oct 2021 08:27 PM
Last Updated : 11 Oct 2021 08:27 PM

ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முடிவு நமது உறுதியை காட்டுகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி

ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முடிவு நமது உறுதிப்பாட்டையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது, இந்தியாவில் இன்று இருப்பது போல் உறுதியான அரசு ஒருபோதும் இருந்ததில்லை என பிரதமர் மோடி கூறினார்.

இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் இன்று இருப்பது போல் உறுதியான அரசு ஒருபோதும் இருந்ததில்லை. இதற்கு விண்வெளித் துறையிலும், விண்வெளி தொழில்நுட்பத்திலும் செய்யப்பட்டுள்ள பெரும் சீர்த்திருத்தங்கள் உதாரணமாகும். இந்திய விண்வெளி சங்கம் (இஸ்பா) அமைவதற்கு பங்களிப்பு செய்த அனைவரையும் பாராட்டுகிறேன்.

விண்வெளி சீர்த்திருத்தங்களில் அரசின் அணுகுமுறை 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது தனியார் துறைக்குப் புதிய கண்டுபிடிப்புக்கான சுதந்திரம். இரண்டாவது ஒரு திறனாளர் என்ற முறையில் அரசின் பங்கு. மூன்று, எதிர்காலத்திற்கு இளைஞர்களைத் தயார் செய்தல். நான்கு, சாமானிய மனிதரின் முன்னேற்றத்திற்கான ஆதாரவளமாக விண்வெளித்துறையை பார்ப்பது. விண்வெளித் துறை என்பது 130 கோடி இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான வழியாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை விண்வெளித் துறை என்பதன் பொருள் சாமானிய மக்களுக்கு சிறந்த வரைபடம் தயாரித்தல், உருவப்படுத்துதல், தொடர்பு வசதிகளை உருவாக்குதலாகும். தொழில் முனைவோருக்கு ஏற்றுமதியிலிருந்து கொண்டு சேர்த்தல் வரை நல்ல வேகம் என்பதும் விண்வெளித் துறையின் பொருளாகும். மீனவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் வருவாய் என்பதற்கும் இயற்கை சீற்றம் குறித்த சிறந்த முன்னறிவிப்புக்கும் இது பயன்படுகிறது.

தற்சார்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல; அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தியாகும். இந்த உத்தி, இந்தியாவின் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களின் திறன்களை விரிவுபடுத்துவதன் மூலம் உலகளாவிய தொழில்துறை உற்பத்தியில் ஆற்றல் மிக்க இடமாக இந்தியாவை மாற்றும்.

இந்த உத்தி, உலகளாவிய வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யும், இந்தியாவில் மனிதவளம் மற்றும் திறமையை உலகளவில் விரிவுபடுத்தும்.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் கொள்கை தெளிவானது.அரசின் தேவை ஏற்படாத பெரும்பாலான துறைகள் தனியார் துறைகளுக்கு திறந்துவிடப்படுகின்றன. ஏர் இந்தியா தொடர்பான முடிவு நமது உறுதிப்பாட்டையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் விண்வெளித் தொழில்நுட்பம் கடைகோடிப் பகுதிக்கும் வசதிகள் வழங்கும், கசிவு இல்லாத, வெளிப்படையான நிர்வாகத்தின் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான வீட்டு வசதி அலகுகள், சாலைகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை செல்பேசி மற்றும் இணையத்தின் மூலம் புவி சார்ந்த நிலைகளை அறிந்து கொள்ளப் பயன்படுத்துவது உதாரணமாகும். செயற்கைக்கோள் படங்களின் மூலம் வளர்ச்சித் திட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

விண்வெளித் ஃபசல் பீமா திட்டத்தின் உரிமைக் கோரல்களை பைசல் செய்வதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, ‘நேவிக்’ முறை மீனவர்களுக்கு உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பேரிடர் மேலாண்மையும் திட்டமிடப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாக தொழில்நுட்பத்தை மாற்றுவது முக்கியம். டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே இந்தியா இன்று முதல் நிலையில் உள்ளது. ஏனெனில் ஏழைகளிலும் ஏழையானவர்களுக்குத் தரவுகள் எளிதாகக் கிடைக்கும் சக்தியை நம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இன்று கூடியிருப்போரின் ஆலோசனைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தீவிரப் பங்களிபு மூலம் வெகு விரைவில் சிறந்த விண்வெளிக் கொள்கையும், தொலையுணர்வுக் கொள்கையும் உருவாகும்.

இப்போது 21 ஆம் நூற்றாண்டில் உலகத்தை ஒன்றுபடுத்துவதிலும், இணைப்பதிலும் விண்வெளித் துறை முக்கியப் பங்கு வகிக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x