நிலக்கரி பற்றாக்குறை; மின்தடை ஏற்படுமா?- மத்திய அரசு விளக்கம்

நிலக்கரி பற்றாக்குறை; மின்தடை ஏற்படுமா?- மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

மின்உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதிய அளவு நிலக்கரி உள்ளதாகவும், இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் நிலக்கரி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதுமான நிலக்கரி நாட்டில் உள்ளது என நிலக்கரித்துறை அமைச்சகம் மீண்டும் உறுதி செய்துள்ளது. மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறானது.

மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள். இது 4 நாட்களுக்கு போதுமானது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளது. அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நிலக்கரி நிறுவனங்களில் இருந்து அதிக அளவிலான சப்ளை காரணமாக, அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி, இந்தாண்டு சுமார் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தேவையின் தின சராசரி அளவு 18.5 லட்சம் டன்கள். இங்கு தினசரி நிலக்கரி விநியோகம் சுமார் 17.5 லட்சம் டன்களாக உள்ளது. பருவமழை நீடிப்பதன் காரணமாக, நிலக்கரி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி ரயில் மூலம் கிடைக்கிறது. நிலக்கரி நிறுவனங்களில் இருந்து தினந்தோறும் நிலக்கரி அனுப்பப்படுகிறது. அதனால் நிலக்கரி இருப்பு குறைவு என்ற அச்சம் தவறானது. உண்மையில், இந்த ஆண்டு, உள்நாட்டு நிலக்கரி விநியோகம், நிலக்கரி இறக்குமதியை கணிசமாக மாற்றியமைத்துள்ளது.

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்கள் அல்லாத அலுமினியம், சிமென்ட், எஃகு போன்ற ஆலைகளுக்கும், நிலக்கரி இந்தியா நிறுவனம், தினந்தோறும் 2.5 லட்சம் டன்கள் நிலக்கரியை அனுப்பி வருவது, நாட்டில் நிலக்கரி இருப்பு போதிய அளவில் உள்ளதை பிரதிபலிக்கிறது.

இவ்வாறு நிலகரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in