கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் 208 நாட்களில் இல்லாத அளவு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

Published on

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 208 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 18,166 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 18ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 53 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30ஆயிரத்து 971 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 208 நாட்களில் இல்லாத அளவுக்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரில் 5,672 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 71ஆயிரத்து 915 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் மிகக் குறைவாகும். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 97.99 சதவீதமாக உயர்ந்துள்ளனர். தொடர்ந்து 16வது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 12 லட்சத்து 83 ஆயிரத்து 212 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 58 கோடியே 25 லட்சத்து 95 ஆயிரத்து 693 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 214 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 589 ஆகக் அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 94.70 கோடியைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in