Published : 09 Oct 2021 06:50 PM
Last Updated : 09 Oct 2021 06:50 PM

கோவிட் தடுப்பூசி தேவை எதிரொலி: 3 சிரிஞ்சிகள்  ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமான சிரிஞ்சிகள் தேவைப்படுவதால் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 3 மாதங்களுக்கு தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் சிரிஞ்சிகளின் தயாரிப்பாளர்கள் உலகின் மிகப்பெரிய கோவிட் தடுப்பு மருந்து திட்டத்தை இந்தியாவில் திறம்பட செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 94 கோடி தடுப்பூசிகளை இந்தியா இதுவரை வழங்கியுள்ளது மற்றும் 100 கோடி டோஸ் அளவை நெருங்கியுள்ளது. இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் தடுப்பூசி போடுவதற்கான உறுதியான அரசியல் அர்ப்பணிப்புடன், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயால் வலியுறுத்தப்பட்ட ‘அந்தியோதயா’ தத்துவத்தை நிறைவேற்றும் வகையில், சிரிஞ்சிகளின் உள்நாட்டு கிடைக்கும் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் ஏற்றுமதிக்கு அரசு அளவுக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

தகுதியுள்ள அனைத்து குடிமக்களுக்கும் மிகக் குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தின் வேகத்தைத் தக்கவைக்க சிரிஞ்ச்கள் இன்றியமையாதவை. தடுப்பு மருந்தை நிர்வகிக்கப் பயன்படும் ஊசிகளின் போதுமான இருப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்திய அரசு பின்வரும் அளவுள்ள ஊசி மருந்துகளின் ஏற்றுமதிக்கு மட்டும் இந்த அளவுக்கட்டுப்பாட்டை விதித்துள்ளது:

• 0.5 மில்லி/ 1 மில்லி ஏடி (ஆட்டோ - டிஸ்போசபல்) ஊசிகள்.

• 0.5 மில்லி/1 மில்லி/2 மில்லி/3 மில்லி டிஸ்போசபல் ஊசிகள்.

• 1 மில்லி/2 மில்லி/3 மில்லி ஆர்யுபி (மறு உபயோக தடுப்பு) ஊசிகள்.

இது அனைத்து வகையான சிரிஞ்சிகளுக்கும் ஏற்றுமதி தடை அல்ல என்றும், குறிப்பிட்ட வகை சிரிஞ்சிகளின் ஏற்றுமதிக்கு மூன்று மாத கால வரையறைக்கு மட்டுமே அளவு கட்டுப்பாடு என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், மேற்கூறியவற்றைத் தவிர வேறு பிரிவுகள் மற்றும் வகைகளின் சிரிஞ்சிகள் அளவு கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x