5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது தூர்தர்ஷன்

5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது தூர்தர்ஷன்
Updated on
1 min read

அடுத்த தலைமுறை ஒலிபரப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஐஐடி கான்பூருடன் பிரசார் பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 5ஜி ஒலிபரப்பு, செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் மூலம் புதிய வாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் கடந்த இரு வருடங்களாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒலிபரப்பு சீர்திருத்தங்கள், அனலாக் டெரஸ்ட்ரியல் டிவி டிரான்ஸ்மிட்டர்கள் போன்ற பழைய ஒளிபரப்பு தொழில்நுட்பங்களை, படிப்படியாக மாற்றி வருவதால், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளின் வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது.

பழமையான ஒளிபரப்பு தொழில்நுட்பங்களை மாற்றும் பிரசார் பாரதியின் ஒலிபரப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி சில ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாயின. சமீபத்தில் டிடி சில்சார், டிடி கலாபுராகி ஆகிய சேனல்கள் பற்றி பொய்யான தவகல்கள் வெளியாயின. இந்த டிடி மையங்கள், அந்தந்த மாநிலங்களில் செயற்கைகோள் ஒளிபரப்புகளுக்கான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தயாரிக்கும் என பிரசார் பாரதி தெளிவுபடுத்தியுள்ளது.

அதோடு, யூட்யூப் போன்ற டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இதன் செயல்பாடுகள் இருக்கும். டிடி சில்சார் மற்றும் டிடி கலாபுராகி ஆகிய சேனல்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிகள், டிடி அசாம் மற்றும் டிடி சந்தானா ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும்.

அனலாக் டெரஸ்ட்ரியல் டிவி டிரான்ஸ்மிட்டர்கள், வழக்கொழிந்த தொழில்நுட்பம். மக்கள் நலன் மற்றும் நாட்டு நலன் கருதி இது அகற்றப்படுகிறது. இது வளர்ந்து வரும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு வழிவகுக்கும். இதன் மூலம் மின்சார செலவும் குறையும். இதுவரை 70 சதவீத அனலாக் டிரான்ஸ்மிட்டர்கள் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள டிரான்ஸ்மிட்டர்களும் படிப்படியாக 2022 மார்ச் 31ம் தேதிக்குள் அகற்றப்படும்.

அடுத்த தலைமுறை ஒலிபரப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஐஐடி கான்பூருடன் பிரசார் பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 5ஜி ஒலிபரப்பு, செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் மூலம் புதிய உள்ளடக்க வாய்ப்புகளும் உருவாகும்.

டிடி இலவச டிடிஎச் மூலம் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்கள் மற்றும் பல தனியார் சேனல்களையும் நாடு முழுவதும் மாதக் கட்டணம் இன்றி பிரச்சார் பாரதி ஒலிபரப்புகிறது. இதற்கான செட்டாப் பாக்ஸ்களை வெளிச் சந்தையில், வாங்க வேண்டும். இதன் மூலம் 120க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் மற்றும் பல கல்வி சேனல்கள், ஆகாஸ்வானியின் 40 செயற்கைகோள் வானொலி சேனல்கள் ஆகியவற்றைப் பெற முடியும் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in