Last Updated : 08 Oct, 2021 04:00 PM

 

Published : 08 Oct 2021 04:00 PM
Last Updated : 08 Oct 2021 04:00 PM

கசந்துவிட்டதா உறவு? -ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு இல்லை: காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர் 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர் | கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியில் விரைவில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சேரப் போகிறார் என்று பேச்சு எழுந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு இல்லை என்று பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் மிகப்பழமையான கட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பிராசந்த் கிஷோர் வார்த்தைகளால் குத்தியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.அதன்பின் 2015ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்தக் கட்சியின் துணைத் தலைவரானார்.

ஆனால், கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிந்தபின் தன்னுடைய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேரப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

அதற்கு ஏற்ப கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசி காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கத்தை அதிகப்படுத்தினார்.

2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் செய்து பணியாற்றி வருகிறார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேர்ப்பது நல்ல பலன் அளிக்கும் என்று கட்சிக்குள் ஒருதரப்பினர் தெரிவித்தனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல் உழைக்காமல், எதிரணியிலிருந்து வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிராசாந்த் கிஷோர் வருவதை சோனியா காந்திக்குக் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த ஜி 23 மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை.

.கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் தேர்தல் களத்தில் பணியாற்றியபோது எந்தவிதமான முரண்பாடும் ஏற்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி செயல்படும் விதம் குறித்தும், காலத்துக்கு ஏற்ப மாறாதது குறித்தும் கிஷோர் விமர்சித்திருந்தார்.

ஆதலால், பிரசாந்த் கிஷோரைக் காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதா அல்லது அதிருப்தி தலைவர்களிடம் கருத்தைக் கேட்டு அவரை நிராகரிப்பதா என காங்கிரஸ்தலைைம இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, தீவிரம் போதவில்லை என்று அந்தக்கட்சியினரே தெரிவித்து வரும் நிலையில் பிரசாந்த் கிஷோர் அந்தக் கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின், முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை அரசியல் ஆலோசகரத்தான் இன்னும் பிரசாந்த் கிஷோர் பணியில் இருக்கிறார்.

சமீபத்தில் கோவா முன்னாள் முதல்வர் லூசின்ஹோ பெலிரியோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரின் இணைவுக்குக்கூட பிரசாந்த்கிஷோர் பங்கு அதிகம் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பெலிரியோ திரிணமூல் காங்கரிஸில் சேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவுதான்.

பலவிதமான கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி சந்தித்து, தன்னைப் புதுப்பித்துக் கொள்ள போராடி வரும் நிலையில் பிரசாந்த் கிஷோர் பசுமரத்தாணி போல் சுருக்கென காங்கிரஸ் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தில் “ லக்கிம்பூர்கெரி விவகாரத்தை அடிப்படையாக வைத்து மிகப்பழமையான கட்சிக்கு உடனடியான, விரைவான புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்த்த சிலருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைக்கும். பழமையான கட்சியில் ஆழமாக வேர்விட்ட பிரச்சினைகளுக்கும், கட்டமைப்பு பலவீனத்துக்கும் துரதிர்ஷ்டமாக விரைவான தீர்வு ஏதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸ் தலைமைக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது அரசியல் வட்டரங்கள் மூலம் தெரிய வருகிறது. இதனால் இப்போதைய சூழலில் காங்கிரஸுக்கு பிரசாந்த் கிஷோர் உறவு கசந்துவிட்டதால், அவர் அந்தக்கட்சியில் சேர்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x