Published : 08 Oct 2021 03:10 PM
Last Updated : 08 Oct 2021 03:10 PM

லக்கிம்பூர் வன்முறையில் உ.பி.அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

கோப்புப்படம்

புதுடெல்லி 

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதில் உ.பி.அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை என்று உச்ச நீதிமன்றம்இன்று அதிருப்தி தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராடினர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. லக்கிம்பூர் கெரி வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்கள் விவரம், முதல்த கவல் அறிக்கை எத்தனை பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்த அறிக்கையை உ.பி. அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு நேற்று உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உ.பி. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆஜராகினார். அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ லக்கிம்பூர் கெரி கலவர விவகாரத்தில் உ.பி. அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை. பொறுப்பான அரசு, போலீஸாரை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது, சிலருக்கு குண்டுகாயம் ஏற்பட்டுள்ளது.

உ.பி. அரசு உங்களிடம் என்ன செய்தியை சொல்லி அனுப்பியுள்ளார்கள். சாதாரண சூழலில் போலீஸார் உடனடியாகச் செல்லமாட்டார்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவும் மாட்டார்கள். இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டாலும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த வழக்கில் எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஐபிசி 302 பிரிவில் கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள். இப்படித்தான் மற்ற வழக்கிலும் நடந்து கொள்வீர்களா. இந்த வழக்கை இப்போதே சிபிஐக்கு மாற்ற முடியாது. வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் ” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x